search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் டேங்க் ஆபரேட்டர் தற்காலிக பணி நீக்கம்- அபராதம் விதிப்பு
    X

    பெண் டேங்க் ஆபரேட்டர் தற்காலிக பணி நீக்கம்- அபராதம் விதிப்பு

    • மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து முறைகேடாக மீன்குட்டைகளுக்கு ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தி வருவதால், சம்மந்தப்பட்ட கிராமமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • அரசு பேருந்தை, காலிகுடங்களுடன் கிராம மக்கள் சம்பவத்தன்று சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது மலையப்பநகர் கிராமம்.இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது.

    இக்கிராமத்தை சேர்ந்த குடியிருப்பு மக்களின், குடிநீர் தேவைக்காக சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வருகிறது.

    குடியிருப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பூமிக்கடியில் பிளாஸ்டிக் பைப் அமைத்து, அதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த சிலர் 4 மீன்குட்டைகள் அமைத்து, விற்பனைக்காக டன் கணக்கில் மீன்களை வளர்த்து வருகின்றனர்.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து முறைகேடாக மீன்குட்டைகளுக்கு ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தி வருவதால், சம்மந்தப்பட்ட கிராமமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குடிநீர் பற்றக்குறையால் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் மக்கள் நாள்தோறும் தவித்துவரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, காரணமான மீன்குட்டை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, இதற்கு துணைப்போன பெண் டேங்க் ஆப்ரேட்டரை பணி நீக்கம் செய்யக்கோரி, மலையப்பநகருக்கு வந்த அரசு பேருந்தை, காலிகுடங்களுடன் கிராம மக்கள் சம்பவத்தன்று சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தொப்பூர் போலீசார் இணைந்து, சம்மந்தப்பட்ட மலையப்ப நகர் கிராமத்திற்கு நேரடியாக சென்று, அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து பூமிக்கடியில் முறைகேடாக, அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைப்புகளையும், ஒகேனக்கல் குடிநீர் மூலம் அமைக்கப்பட்டுள்ள 4 மீன்குட்டைகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மீன்குட்டைகளுக்கு முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட பெண் டேங்க் ஆப்ரேட்டர் நாகம்மாள் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து, முறைகேடாக பயன்படுத்திய ஒகேனக்கல் குடிநீருக்கு ரூ.8189-ஐ அபரதாமாக செலுத்திட, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×