தோழியின் நிச்சயதார்த்த விழாவில் நகை திருடிய பெண் கைது

பீரோவில் இருந்த மணப்பெண்ணின் செயின், ஆரம், வளையல், மோதிரம் ஆகிய நகைகள் மாயமாகி இருந்தது.போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியை பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட வினிதா.
கைது செய்யப்பட்ட வினிதா.
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது ஆரிப்.

இவரது மகளுக்கு கடந்த 18ந்தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, செயின், ஆரன், வளையல், மோதிரம் ஆகிய பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குற்றப்பிரிவு காவலர்கள் திருமுருகன், மோகன், சிவசங்கரி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.மேலும் விசாரணையில் அவர் எம்சிஏ பட்டதாரியான வினிதா, மணப்பெண்ணுடன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளார்.

பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18ந்தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார் அப்போது மணப்பெண் நகைகளை கழட்டி வைத்தபோது நோட்டமிட்டு வந்துள்ளார்.

பின்னர் தோழி மற்றும் உறவினர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போன்று ஊருக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார்.

பின்னர் மன்னார்–குடிக்கும் சொந்த ஊர் திருத்துறை ப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நகைகளை கைப்பற்றி வினிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் முத்து ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com