

கடலூர்:
பண்ருட்டி எல்.என்.புரம் குமரன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 51). இவர்களின் 2-வது மகன் அஸ்வின்குமாருக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதனால் வருகிற 17-ம்தேதி நடைபெற உள்ள மகன் திருமணத்திற்கு உறவினர்கள் வீட்டிற்கு பத்திரிகை வைப்பதற்கு 2 நாட்களாக வீட்டிலிருந்து வெளியில் சென்றதாக தெரிகிறது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு ரவிச்சந்திரன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த பீரோவில் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் மற்றும் இவரது மனைவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு வழக்குபதிவு செய்து பீரோவை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.