search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில்  சுடர் ஓட்டத்திற்கு வரவேற்பு
    X

    சுடர் ஓட்டத்திற்கு நேஷனல் பொறியியல் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சுடர் ஓட்டத்திற்கு வரவேற்பு

    • தேசிய மாணவர் படையின் 75-வது பவளவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’எனும் சுடர் ஓட்டம் நடைபெறுகின்றது
    • தேசிய மாணவர் படை மாணவர்கள் என சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்டு இந்த ஓட்டத்தை சிறப்பிக்கின்றனர்.

    கோவில்பட்டி:

    தேசிய மாணவர் படை (என்.சி.சி.)யின் 75-வது பவளவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் என்.சி.சி. 'யூனிட்டி ஃப்ளேம் ரன்' எனும் சுடர் ஓட்டம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, வருகிற ஜனவரி 18-ந் தேதி புதுடெல்லி, இந்தியா கேட் வரை சுமார் 3000 கிலோமீட்டர்கள், நாள் ஒன்றுக்கு 50 கிலோமீட்டர் தூரம் என தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறுகின்றது.

    ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை வலியுறுத்தி நடைபெறும் இச்சுடர் ஓட்டம், இந்தியாவின் மிகப்பெரிய சுடர் ஓட்டமாகவும் நமது இளைஞர்கள் மற்றும் என்.சி.சி. கேடட்கள் ராணுவத்தில் சேர உந்துதலாகவும் இருக்கும் எனக்கருதப்படுகிறது. இந்தியாவின் அனைத்து ராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ -மாணவி யர்கள் என சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்டு இந்த ஓட்டத்தை சிறப்பிக்கின்றனர்.

    கன்னியாகுமரியில் கடந்த 20-ந் தேதி தொடங்கிய இச்சுடர் ஓட்டம் நேற்று கோவில்பட்டி வந்தடைந்தது. நிகழ்ச்சிக்கு நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் காளிதாஸ் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒற்றுமை சுடர் ஓட்ட அணியை கொடி அசைத்து வரவேற்றார். இதில் சேனா வீர பதக்க விருது பெற்ற கர்னல் கே.எஸ்.பத்வார், கர்னல் டி.எஸ்.மாலிக், கர்னல் ஏ.என்.ஜா, லெப்டினன்ட் கர்னல் நவீன் யாதவ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஓடினர். மேலும், இந்நிகழ்வில் திருநெல்வேலி, 9 (த. நா) சிக்னல் கம்பெனி லெப்டினன்ட் கர்னல் சின்ஹாவும் கலந்து கொண்டார்.

    கோவில்பட்டியிலிருந்து 'யூனிட்டி ஃபிளேம் ரன்' சுடர் நகரும் நிகழ்வை ஒருங்கிணைப்பதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நேஷனல் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படைப்பிரிவு சிறப்பாக செய்திருந்தது. மேலும் இன்று கல்லூரியில் தங்கியிருக்கும் சுடர் ஓட்ட அணியினரை, கல்லூரி இயக்குனர் சண்முகவேல் சுடர் ஓட்ட ஜோதி ஏற்றி கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார். இதில் நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர்கள் சுமார் 130-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர் களின் வழிகாட்டுதலின்படி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள் கே.கணேசன், என்.பி.பிரகாஷ், ஜி.ஆர்.ஹேமலட்சுமி மற்றும் டி.சத்தியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×