search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளியையொட்டி களைகட்டியது: அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை
    X

    அய்யலூர் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள்.

    தீபாவளியையொட்டி களைகட்டியது: அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் அதிக அளவு வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது.
    • ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகள், கோழி உள்ளிட்ட கால்நடை களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, கரூர், சேலம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கால்நடைகளை வாங்க வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. புதுமண தம்பதிகள் தலைதீபாவளிக்கு விருந்துக்கு வருவார்கள். அவர்களுக்கு அசைவ உணவு தயாரித்து பரிமாறுவதற்காக அதிக அளவில் ஆடுகள் வாங்க வந்தனர்.

    மேலும் திருவிழாக்கள், விஷேசங்கள் தொடர்ந்து வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வெளியூர்களில் வேலை பார்க்கும் பொதுமக்கள் தீபாவளியையொட்டி அடுத்த வாரம் ஊர் திரும்புவார்கள். அய்யலூர் ஆட்டுச் சந்தையில் அதிக அளவு வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது.

    10 கிலோ கொண்ட ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.350 முதல் ரூ.380 வரை விற்பனையானது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதிகாலையிலேயே சந்தை கூடி 9 மணிக்கு முன்பே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது. வருவாய் அதிகரித்த போதும் வாரச்சந்தையில் குடிநீர், மின்விளக்கு, சுகாதார வசதிகள் இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வசூலில் அதிக கவனம் செலுத்தும் தனியார் நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை. தற்போது மழைகாலம் என்பதால் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்குகிறது. இதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    எனவே வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×