விருதுநகரில் பரபரப்பு: கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பெண் கைது

நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் பரபரப்பு:  கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பெண் கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பஞ்சவர்ணம் (வயது40). இவரிடம் ஒரு பெண் பழம் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு போல் இருந்துள்ளது. இதனால் வேறு ரூபாய் நோட்டை தருமாறு பஞ்சவர்ணம் கூறியுள்ளார்.

உடனே அந்த பெண் முதலில் கொடுத்த 500 ரூபாயாயை வாங்கி கொண்டு வேறு ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை இரண்டும் கள்ளநோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பழம் வாங்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புதாய் (56) என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள துரைச்செல்வி என்பவரின் மகள் பெற்ற தொகையிலிருந்து இந்த நோட்டை எடுத்து வந்து பழம் வாங்கியதாக தெரிவித்தார்.

இதையடுத்து வேண்டுராயபுரத்தில் உள்ள துரைசெல்வியின் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக சுப்புதாயை போலீசார் கைது செய்தனர். துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துரைசெல்வி கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சில நபர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com