search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யூனியன் அலுவலக பூமி பூஜை 3-வது முறையாக ஒத்திவைப்பு: பொதுமக்கள் ஏமாற்றம்
    X

    புதிய யூனியன் அலுவலக கட்டிடத்துக்கு 3-வது முறையாக பூமிபூஜைக்கான ஏற்பாடு நடந்தது.

    யூனியன் அலுவலக பூமி பூஜை 3-வது முறையாக ஒத்திவைப்பு: பொதுமக்கள் ஏமாற்றம்

    • அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் வராததால் யூனியன் அலுவலக கட்டிட பூமி பூஜை 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
    • தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் சில இடங்கள் பழுதடைந்து விட்டதால் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் இடம் தேர்வு செய்யப்பட்டடது.

    நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம்,கருவூலம் என அடுத்தடுத்து அலுவலகங்கள் அருகில் இருந்ததால் இந்த இடம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்து 2 முறையும் அமைச்சர் வராததால் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

    ராஜபாளையத்தில் நேற்று தி.மு.க இளைஞர் அணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா உள்பட தி பலர் கலந்து கொண்டனர் .

    இந்த நிலையில் அமைச்சர் பூமிபூஜையை நடத்திவைப்பார் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஏற்கனவே 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட ராஜபாளையம் மாடசாமி கோவில் செல்லும் சாலையில் யூனியன் அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 3-வது முறையாக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்தது.

    நேற்றும் அடிக்கல் நாட்ட அமைச்சர் வரமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் 3-வது முறையாக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பூமிபூஜைக்கான தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    யூனியன் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதில் தி.முக.வினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவுபட்டு கிடப்பதால் அரசு பணம் விரயம் ஆகிறது.

    பல்வேறு பணிகளை ஒதுக்கிவிட்டு இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் 3-வது முறையாக பூமிபூஜை ஒத்தி வைக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    3-வது முறையாக பூமிபூஜை தடைபட்டுவிட்டதால் இதை கெட்ட சகுனமாக எடுத்துக் கொண்டு யூனியன் அலுவலகத்திற்கு வேறு இடம் தேர்வு செய்வதுதான் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    Next Story
    ×