search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள்
    X

    முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள்

    • முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள் 2நாட்கள் நடக்கிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சதுரங்க ஒலிம்பியாட் என்பது மனிதகுலத்தின் புத்தி கூர்மை வாய்ந்த சிறந்த படைப்புத் திறனை உடைய சிந்தனைகளின் சங்கமிக்கும் போட்டியாகும். மேலும் சதுரங்க வீரர்களும், சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமுடையவர்களும் முக்கியமாக எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

    சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முதல் அதிகாரப்பூர்வ சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு லண்டனில் நடந்தது. சதுரங்க ஒலிம்பியாட்ஸ் போட்டிகள் ஆண்டுதோறும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பியாட்டில் அதிகளவு பங்கேற்பான 176 நாடுகளின் பங்கேற்பை மிஞ்சும் வகையில் தற்போது 187 நாடுகளின் சாதனைப் பங்கேற்பை எதிர் நோக்கியுள்ளது. இந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள், இந்திய சதுரங்க போட்டிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனித்தன்மை உடையதாக நடைபெற உள்ளது.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறைகள் ஒருங்கிணைந்து பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், அனைத்துத் தரப்பு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலக கூட்டரங்கில் நாளை (21-ந் தேதி) 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், நாளை மறுநாள் (22-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த சதுரங்கப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×