search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி
    X

    கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி

    • விவசாயம், மண்பாண்ட தொழில்களுக்கு கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுக்க தகுதி வாய்ந்த கண்மாய்களாக தேர்வு செய்யப்பட்ட விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு வெளியீடு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாடு பணிகளுக்கு அரசு அனுமதித்த வண்டல் மண், களிமண்ணை சிறப்பு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக எடுத்துச் செல்ல விவசாய பணி செய்யும் விவசாயிகள் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய வற்றுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்தும், மண்பாண்ட தொழில் செய்பவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினருக்குரிய சான்றிதழை இணைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநரிடம் மனு செய்து தேவையான வண்டல் மண், களிமண்ணை கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.

    விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 222 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேற்கண்ட பயன்பாட்டிற்காக அளிக்கப்படும் இலவச அனுமதியினை வணிக நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×