இரை தேடி ஊருக்குள் வந்த அரிய வகை மரநாய் சாவு

சிவகாசி அருகே இரை தேடி ஊருக்குள் வந்த அரிய வகை மரநாய் இறந்தது. காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது.
பிடிபட்ட மரநாய்
பிடிபட்ட மரநாய்
Published on

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள வைப்பாற்று கரையில் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான்கள், காட்டு பன்றிகள், மிளா, வரையாடு, செந்நாய், உள்பட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இவை உணவுக்காக அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம்.

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் பகுதியில் நேற்று நாய்கள் விரட்டியதில் தப்பிய விலங்கை அந்த பகுதி வாலிபர்கள் மீட்டனர். பெயர் தெரியாத அரிய விலங்கு பிடிபட்டதாக வெம்பக்கோட்டை கால்நடைத்துறைக்கும், வனத்துறையினருக்கும் சமூக ஆர்வலர் கண்ணன் தகவல் தெரிவித்தார்.

காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது. பின்னர் வந்த வனச்சரக அலுவலர் பழனிக்குமார், கால்நடை மருத்துவர் திலகவதி ஆகியோர் அந்த விலங்கை பரிசோதித்த போது அழிந்து வரும் இனத்தை சேர்ந்த மரநாய் என்பது தெரியவந்தது.

மேலும் இந்த வகை விலங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இறந்த மரநாய்க்கு 3 வயது என்பதும், பெண் இனத்தை சேர்ந்ததும் தெரிந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மரநாய் அருகிலேயே புதைக்கப்பட்டது.

இந்த பகுதியில் ஏராளமான அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால் அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com