உடன்குடி தேரியூரில் கிராம சேவை திட்ட நிறைவு விழா

ராசா சுடலைமுத்து விழாவிற்கு தலைமை தாங்கினார்.விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
உடன்குடி தேரியூரில்  கிராம சேவை திட்ட நிறைவு விழா
Published on

உடன்குடி:

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் தமிழகத்தில் 280 கிராமங்களில் இலவசமாக யோகா கற்றுத்தரும் கிராமிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டு 257 கிராமங்களில் நிறைவு பெற்றுள்ளது. 258-வது கிராமமாக பயிற்சிகளை நிறைவு செய்து ஆரோக்கியமான அமைதி கிராமமாக மாற்றப்பட்ட உடன்குடி தேரியூரில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் விருதுநகர் மண்டல தலைவர் ராசா சுடலைமுத்து தலைமை தாங்கினார். சங்க இயக்குநர் ஜானகிராமன், இணை இயக்குநர் பாலமுருகன், உடன்குடி மனவளக்கலை மன்ற தலைவர் இசக்கியப்பன், துணைத்தலைவர் செல்வகுமார், தலைமை பொறுப்பாசிரியர் சங்கரவடிவேல், திருமுருகன் கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம சேவைத் திட்ட இயக்குநர் முருகானந்தம், தேரியூர் ஊர் தலைவர் சிவ நடராஜன், ஆகியோர் பேசினார்கள். சேவைத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களின் அனுப வங்கள், ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், படக் காட்சிகள், நூல் கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. உலக சமுதாய சேவா சங்க தலைவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மயிலானந்தன், காணொலிக் காட்சியில் பங்கேற்று நிறைவுரையாற்றினார். சேவைத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட யோகாப் பயிற்சிகள், மனநல மருத்துவ முறைகள், மரம் வளர்த்தல், சுற்றுப்புற சுகாதாரம், ஆரோக்கிய மேம்பாடு, மாணவர்களுக்கான திறனூக்கப் பயிற்சிகள் ஆகியவற்றை தினமும் கடைபிடிக்க உறுதி எடுக்கப்பட்டது. மனவளக்கலை மன்ற செயலர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com