விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை

போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலம்.என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை
Published on

சென்னை:

இலங்கையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு 13 இலங்கை தமிழர்கள் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் புகுந்தது தெரிய வந்தது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழக பகுதிக்கு வந்து பின்னர் பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் மூலமாக இவர்கள் மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அம்மாநில போலீசார் கண்டு பிடித்தனர்.

இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த சீனிஆபுல்கான் என்பவர் உள்பட சிலர் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மங்களூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இவர்களில் 3 பேர் தலை மறைவானார்கள்.

மங்களூர் போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சட்ட விரோதமாக இலங்கை தமிழர்களை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டி புதிய வழக்கை பதிவு செய்திருந்தார்கள்.

இதுபற்றி அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் ஆள் கடத்தலின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. இலங்கையில் இருந்து 38 தமிழர்களை கனடாவில் குடியேற வைப்பதற்காக போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலமானது.

இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக 10 பேர் மீதும் கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 3 பேரில் சீனி ஆபுல்கான் என்கிற விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com