search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
    X

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

    • குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல
    • ஏரிக்கரையை பலப்படுத்தவும் தீர்மானம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில் ராமாலை நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை, ராமாலைப் பகுதியில் புற காவல் நிலைய அமைக்க வேண்டும்,

    குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும், பல கிராமங்களில் டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது டவுன் பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    கூட நகரம் ஏரிக்கரை ஒரு பகுதியில் சாலை அமைக்காமல் உள்ளது உடனடியாக சீர் செய்து சாலை அமைக்க வேண்டும், கள்ளூர்மேடு பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும்,

    உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், கருணீகசமுத்திரம் ஏரி நிரம்பினால் ஊருக்குள் தண்ணீர் வருகிறது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், வளத்தூர் ஏரி நிரம்பி செல்லும்போது ஒரு சாலை துண்டிக்கப்படுகிறது உடனடியாக பாலம் வேண்டும்,

    முக்குன்றம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் மழை நீர் ஒழுகுகிறது மழை பெய்தால் விடுமுறை அளிக்கப்படுகிறது உருண்டையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

    உறுப்பினர் இமகிரிபாபு பேசும்போது வள்ளலார் நகரில் தெருவின் நடுவே மூன்று மின்கம்பங்கள் உள்ளது இதனால் அப்பகுதியில் கார், ஆட்டோ செல்ல முடியவில்லை அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் வருவதற்கு வழியில்லை, மூன்று மின்கம்பங்களை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இதனையடுத்து மின்கம்பங்களை அகற்ற தனது சொந்த பணத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அகற்றப்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ராமாலை பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தீர்மானங்களை கொண்டு வந்தார் அதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பாலங்கள் துண்டிக்கப்பட்டு சாலைகள் பழுதடைந்தது அதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பழுதடைந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதனை தடுக்கும் பொருட்டு 3 ஆயிரத்து 800 மீட்டர் நீளமுள்ள ஏரிக்கரையை பலப்படுத்தி நடைப்பாதை அமைக்க வேண்டும், சீவூர்-மூங்கப்பட்டு இடையே பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மனோகரன், குட்டி வெங்கடேசன், சுரேஷ்குமார், தியாகராஜன், ரஞ்சித் குமார், சரவணன், தீபிகா உள்பட பலர் பேசினார்கள்.

    Next Story
    ×