search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி சின்னாபின்னாமாகும் வாகனங்கள்
    X

    பள்ளத்தில் சிக்கிய மினி வேன்

    பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி சின்னாபின்னாமாகும் வாகனங்கள்

    • போக்குவரத்து பாதிப்பு-பொதுமக்கள் அவதி
    • பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாநகரம், முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும் வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்றை கொண்டது. இந்தியாவில் அகழி யுடன் கூடிய ராணுவ ரீதியாக கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோட்டை என்ற பெருமை கொண்டது.

    வேலூர் நகராட்சி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1947-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு 40 வார்டுகள் கொண்ட நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகர எல்லை விரிவாக்கத்தில் தாராபடவேடு, சத்துவாச்சாரி நகராட்சிகளுடன் அல்லாபுரம், தொரப்பாடி, சேண்பாக்கம் பேரூராட்சிகள் மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.

    தொழில் நகரமாக விளங்கும் வேலூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்து போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக காட்சி அளிக்கிறது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் மாநகராட்சி குப்பையை எரிக்காமல் முறையாக அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் மண்ணை சுத்தப்படுத்த மாற்று ஏற்பாடு, கோட்டை அகழி நீர் வெளியேறும் ஆங்கிலேயர் காலத்து கால்வாயை மீட்பது, கன்சால்பேட்டை, இந்திரா நகர் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்று வது, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு நோக்கங்களோடு தொடங்கப்பட்டது.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநகரில் பூங்கா அமைத்தல், சாலைகள் புதுப்பித்தல், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

    இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகி விட்டன. சில தெருக்களில் சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் லேசான தூறல் விழுந்தாலே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட தெருக்கள் சேறும், சகதியுமாய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவி கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாக னங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து காயங்களுடன் செல்வது வாடிக்கையாகி விட்டது.

    வேலூர் காகிதப்பட்டறை கிரவுண் தியேட்டரில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து பணிகள் முடிந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக பெய்துவரும் சாரல் மழையின் காரணமான, சாலை பள்ளங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கொட்டப்பட்டிருந்த மண் பூமி உள்வாங்கியது. இன்று காலை குடிநீர் கேன்களை ஏற்றி லோடு ஆட்டோ ஒன்று அந்த வழியாக சென்றது. சாலையில் ஆங்காங்கே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஆட்டோவின் சக்கரம் சிக்கிக்கொண்டது. என்னசெய்வது என தெரியாமல் தவித்த டிரைவர் நீண்ட நேரம் கழித்து, அந்த பகுதிகள் உதவியுடன் ஆட்டோவை பள்ளத்தில் இருந்து மீட்டு எடுத்து சென்றார்.

    இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதித்தது. இதே போல மாநகரில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் சின்னாபின்னாமாகுகிறது. பணிகள் தொடங்கி அரை குறையாக உள்ள இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டும்.

    Next Story
    ×