search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ேவலூர் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    ேவலூர் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • ரூ. 54 ேகாடியில் கட்டப்பட்டுள்ளது.
    • ரூ.360 கோடியில் நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலம் ஆம்பூர் வந்து தங்கினார்.

    திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக காரில் திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

    வழி நெடுகிலும் அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கலெக்டர் அமர் குஷ்வாஹா தி.மு.க நிர்வாகிகள் புத்தகங்கள், சால்வை ஆகியவற்றை வழங்கி மு.க ஸ்டாலினை வரவேற்றனர்.

    பின்னர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் சென்றார்.

    அங்கு பல்வேறு துறைகளின் சார்பில் 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியே 42 லட்சத்து 51,541 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பத்தூர் நகரமே இன்று காலை விழா கோலம் பூண்டிருந்தது.

    திருப்பத்தூரில் நடைபெற்ற விழா நிறைவடைந்ததும் அங்கிருந்து காரில் வேலூருக்கு முதல்அமைச்சர் புறப்பட்டு வந்தார்.ரூ.54 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலூர் புதிய பஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 4.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.விழாவில் வேலூர் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 10 லட்சத்தில் முடிவற்ற 17 திட்ட பணிகளை திறந்து வைத்தும், ரூ.32 கோடியே 89 லட்சம் மதிப்பில் 50 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்அமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு ரூ.360 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடல் வெப்பநிலை விழா தொடங்கும் முன்பாக பரிசோதனை செய்யப்பட உள்ளது.அதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே முதல் அமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிகள் விழாவில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதல்மைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா நிறைவடைந்ததும் முதல்மைச்சர் மு. க.ஸ்டாலின் ராணிப்பேட்டை செல்கிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    Next Story
    ×