

வேலூர்:
திருப்பத்தூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று அலமேலு மங்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
நேற்று இரவு நிகழ்ச்சி முடித்துக்கொண்டு திருப்பத்தூர் செல்வதற்காக அலமேலு மங்காபுரத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 பெண்கள் இருந்தனர்.
அந்த ஆட்டோவில் ஏறி பஸ் நிலையம் சென்றார். கிரீன் சர்க்கிளில் உள்ள ஓட்டல் அருகே 3 பெண்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றனர்.
பின்னர் பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் ஆட்டோவுக்கு கட்டணம் தருவதற்காக தனது பையை திறந்து பார்த்தார். அப்போது பையில் இருந்த 1½ பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பெண்ணை அங்கு அனுப்பி வைத்தனர்.
வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.