கோழி கழிவுகளை உரமாக தயாரிக்க நடவடிக்கை

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல் வீடு வீடாக சென்று பார்வையிட்டு ஆய்வு
கோழி கழிவுகளை உரமாக தயாரிக்க நடவடிக்கை
Published on

வேலூர்:

காட்பாடி காந்தி நகரில் மாநகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள் வீடுகளின் வாசலில் தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பை மக்கா குப்பைகளை எடுத்துச் செல்வதை கலெக்டர் வீடு வீடாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து காந்திநகர் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது;

காட்பாடி காந்தி நகர் பகுதியில் 44 தெருக்கள் உள்ளன. இந்த 44 தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரித்து நுண்உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரப்பதம் இருக்க கூடிய பொருட்களும் நுண்உரமாக தயாரிக்கப்படுகிறது.

அட்டை பெட்டிகள், காகிதங்கள், காகிதப் பைகள், துணிமணிகள், பிளாஸ்டிக் ஆகியவற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும். குப்பைகளோடு சேர்த்து போட வேண்டாம். அதே போன்று பால் பாக்கெட்டுகள், தயிர் பாக்கெட்டுகள், இலைகள் ஆகியவற்றை தனியாக எடுத்து வைத்து மாநகராட்சியிலிருந்து வரும் பணியாளர்களிடம் ஒப்படைக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தினமும் 850 கிலோ முதல் 1000 கிலோ வரை நுண் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் மாநகராட்சி முழுவதும் 52 இடங்களில் நுண் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பேரூராட்கள், நகராட்சி பகுதிகளிலிருந்து கொட்டப்படும் கோழி கழிவுகள் தனியாக உரமாக தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது காட்பாடி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி பொறியாளர் செந்தில், சுகாதார அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com