மகன் பத்திரப்பதிவு செய்து நிலமோசடி செய்ததாக மூதாட்டி பரபரப்பு புகார்

பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு வேலூர் கலெக்டர் ஆபீசில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
மகன் பத்திரப்பதிவு செய்து நிலமோசடி செய்ததாக மூதாட்டி பரபரப்பு புகார்
Published on

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கூட்டம் நடந்தது.

ஊசூர் அருகே உள்ள மூதாட்டி புலி மேடு கிராமத்தைச் சேர்ந்த சின்ன கண்ணு என்பவருடைய மனைவி பூங்காவனம்மாள் வயது (80). இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார்.

அப்போது பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்திருந்தார். இதனை கண்ட போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இது பற்றி மகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மூதாட்டியிடம் வந்து விசாரித்தார்.

அப்போது அவர் எனக்கு3 மகன் ஒரு மகள் உள்ளனர். எனக்கு சொந்தமான நிலத்தை மூத்த மகன் எனக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்து கொண்டுள்ளார்.

இதனால் மற்ற பிள்ளைகளுக்கு இடத்தை பிரித்துக் கொடுக்க முடியவில்லை. எனவே அவரிடமிருந்து நிலத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

பூங்காவனம்மாளின் மூத்த மகன் செய்துள்ள நில பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

பொதுமக்கள் மனு கொடுக்க வரும்போது இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் வகையில் பெட்ரோல் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. லதா மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாநகராட்சி 21 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டப்படுவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கழிவு நீர் தேங்கி நோய் பரப்பும் வகையில் அமைந்துள்ளது.

பன்றிகளின் குடியிருப்பாக மாறி உள்ளது. அந்த பகுதி மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுக்கம்பாறை அருகே உள்ள அ.கட்டுப்படி மற்றும் துத்திப்பட்டு பகுதிகளில் வாழ்ந்து வரும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com