

வேலூர்:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் வகையில் உடனடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண் சான்றிதழ் வைத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். மேலும் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
அந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா, அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவர்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் நகல் வருகிற 28-ந் தேதி (நாளைக்குள்) ஒப்படைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் வருகிற 31-ந் தேதி முதல் மாணவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.