search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
    X

    தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

    • இடிப்பது போல் சென்றதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 42). இவர் சைக்கிளில் சென்று வீட்டுக்கு தேவையான சோப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் சம்பத்குமார் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் நேதாஜி சவுக் அருகே பேரணாம்பட்டு ரோடு பகுதியில் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோ சைக்கிளை இடிப்பது போல் உராய்ந்து சென்றுள்ளது.

    அப்போது சம்பத்குமார் ஆட்டோ டிரைவரிடம் ஏன் இப்படி வருகிறாய் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் சம்பத்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை அங்கிருந்து நபர்கள் தடுக்க வந்த போது அவர்களையும் அந்த ஆட்டோ டிரைவர் மிரட்டினார்.

    இந்த சம்பவங்கள் அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது மேலும் அங்கிருந்த நபர் ஒருவர் இச்சம்பவங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்.

    இதனையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் சம்பத்குமாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை தர்ஜி வரதையன் தெருவை சேர்ந்த யுவராஜ் (34) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் யுவராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×