பைக்கில் சந்தன மரங்களை கடத்திய வாலிபர் கைது

சினிமா பணியில் போலீசார் மடக்கி பிடித்தனர் வேலூரில் பரபரப்பு
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக் கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக் கட்டைகள்
Published on

வேலூர்:

வேலூர் கோட்டை அருகே நேற்று இரவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 2 மணிக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா காட்சி போல அவர்களை விரட்டி சென்றனர். அண்ணா சாலையில் வாலிபர்கள் வந்த பைக்கை போலீசார் மடக்கினர்.

அப்போது அதிலிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பைக் ஓட்டி வந்த மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 28) தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது.

அவர்கள் வந்த பைக்கில் 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனமரக்கட்டைகள் இருந்தன. மேலும் சந்தன மரங்களை வெட்ட பயன்படுத்தும் கத்தி 2 ரம்பம் ஆகியவை இருந்தன.

பைக்குடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் பைக் ஆகியவற்றை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மணிகண்டன் சந்தன மரங்களை ஒரு கும்பலிடம் வாங்கி வைத்துவிட்டு என்னை அழைத்தார். நான் பைக்கில் வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆரணி நோக்கி சென்றேன் வேறு எதுவும் எனக்கு தெரியாது என ராஜசேகர் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கத்தி ரம்பம் ஆகியவை வைத்திருந்ததால் வேலூர் பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com