search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோர்தானா அணையிலிருந்து 700 கன அடி வெள்ள நீர் வெளியேற்றம்
    X

    குடியாத்தம் மோர்தானா அணையிலிருந்து 700 கன அடி வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட காட்சி.

    மோர்தானா அணையிலிருந்து 700 கன அடி வெள்ள நீர் வெளியேற்றம்

    • குடியாத்தத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
    • பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு

    குடியாத்தம்:

    தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பாலும், நேற்று இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், மோர்தானா அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆதாரமான ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள பெரிய ஏரியான மாடிஏரி நிரம்பி வழிவதால் மோர்தானா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. அணை 8 சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து அணையின் நீர்மட்டம் 11.58 மீட்டராக உயர்ந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மோர்தானா அணையிலிருந்து வினாடிக்கு 708 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.

    அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து மோர்தானா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்யா மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    குடியாத்தம் தாலுகா போலீசார் மோர்தானா அணை வெள்ளநீர் வழிந்தோடும் கவுண்டன்யா மகாநதி ஆறு செல்லும் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.

    வேலூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் குடியாத்தம் உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மோர்தானா அணை வெள்ளநீர் செல்லும் பாதைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் மேலும் குடியாத்தம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் வலதுபுற, இடதுபுறம் மோர்தானா அணை கால்வாய்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×