வருசநாடு-வாலிப்பாறை சேதமடைந்த சாலையால் தொடர் விபத்துகள்

வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு-வாலிப்பாறை சேதமடைந்த சாலை.
வருசநாடு-வாலிப்பாறை சேதமடைந்த சாலை.
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார் சாலை அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்ட அளவிலான தார் சாலை பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வனத்துறையினர் குறிப்பிட்ட அளவிலான பகுதிக்கு மட்டும் தார் சாலை அமைக்க தற்போது வரை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் மட்டும் தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது.

இதற்கிடையே கடந்த வாரம் வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. எனவே இரவு நேரங்களில் பைக் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தார் சாலை சேதமடைந்த பகுதியில் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக வருசநாடு முருக்கோடை இடையே சாலை அதிக அளவில் சேதமடைந்து விட்டதால் ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி செல்ல முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களை இறக்கிவிட்டு குறிப்பிட்ட தொலைவு நடந்த சென்று மீண்டும் ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com