

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏராளமான குளங்கள் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் விவசாயிகள் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பயிர்களுக்கு முக்கிய தேவையாக உள்ள யூரியா உள்ளிட்ட உரங்கள் சாத்தான்குளம் பகுதியில் முறையாக கிடைக்கவில்லையென புகார் எழுந்துள்ளது.
அந்த பகுதியில் தனியார் உரக்கடைகளிலும், கூட்டுறவு கடைகளில் போதுமான அளவு உரங்கள் இருப்பு இல்லை எனவும், தட்டுப்பாட்டால் வெளியிடங்களில் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயியும், சாத்தான்குளம் வட்டார த.மா.கா. தலைவருமான முரசொலிமாறன் கூறுகையில், சாத்தான்குளம் பகுதியில் உரத்தட்டு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இன்னும் இப்பகுதிக்கு உரங்கள் கொண்டு வரப்படவில்லை.
வசதியான விவசாயிகள் நெல்லை, நாகர்கோவில் பகுதியில் இருந்து உரங்களை வாங்கி விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். ஏழை விவசாயிகள் உரம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதலால் மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது.
வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் உரக்கடைகள் முன்பு விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். அவர்கள் தங்களது ஆதார் கார்டுகளை கொண்டு சென்று உரக்கடைகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.