திருச்சி அம்மாமண்டபத்தில்பழமையான அரச மரம் முறிந்து விழுந்தது

அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இன்று காலை இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது
திருச்சி அம்மாமண்டபத்தில்பழமையான அரச மரம் முறிந்து விழுந்தது
Published on

திருச்சி

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதல் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த வண்ணம் இருப்பர். அவ்வாறு வரும் பக்தர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் நீராடி விட்டு, உடல் தூய்மை பெற்று அரங்கனை தரிசிக்க செல்வர். மேலும் இங்கு வேத விற்பன்னர்கள் எப்போதும் இருப்பதால் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களும் இங்குதான் அதிகளவில் வருவர். இங்கு காவிரியில் நீராடிவிட்டு புரோகிதர்களின் உதவியுடன் தர்ப்பணம் கொடுப்பர். இதன் காரணமாக அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

இந்த அம்மாமண்டபம் படித்துறையில் 70 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று உள்ளது. அம்மா மண்டபத்தின் பெரும்பாலான பகுதிக்கு நிழல் தரும் விருட்சகமாக இது விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக, இன்று காலை இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. கிளை முறியும் சத்தம் கேட்டு, தர்ப்பணம் கொடுத்தவர்களும், காவிரியில் குளித்துக்கொண்டிருப்பவர்களும் உஷாராகி ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் மரக்கிளை முறிந்து விழுந்த இடத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கிளைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சிரமப்பட்டு மீட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அங்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் உள்ள பழமை வாய்ந்த அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்தது ஏதோ பெரிய அசம்பாவத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com