

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது53). இவர் துறையூர் - ஆத்தூர் செல்லும் சாலையில் டிராக்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை கடையின் அருகே வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது, நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு ஜெயபாலன் அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயபாலன் துறையூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (22) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் ராமச்சந்திரனை உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு உள் நோயாளியாக போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துறையூரில் திருட்டு வழக்கில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.