search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத மக்களை புறக்கணித்த மாநகராட்சி
    X

    குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத மக்களை புறக்கணித்த மாநகராட்சி

    • குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத மக்களை மாநகராட்சி புறக்கணித்துள்ளது
    • அனைவரும் கைவிட்டு விட்டதாக குடியிருப்பு வாசிகள் புலம்பல்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெரு பகுதி மாநகராட்சியின் பழைய 35-வது வார்டில் இருந்தது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறு மறு வரையறை செய்யப்பட்டபோது புதிய 47-வது வார்டுடன் சேர்க்கப்பட்டது.

    இந்த மொராய்ஸ் கார்டன் ரன்வே நகரில் 2019 ஆம் ஆண்டுகளில் 5 குடியிருப்புகள் மட்டுமே இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த குடியிருப்பு வாசிகள் சாலை, தெரு விளக்கு, பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது 47-வது வார்டு வாக்காளர் பட்டியலில் மேற்கண்ட குடியிருப்பு வாசிகள் இடம்பெறவில்லை. வெளியூர்களில் வாக்குகள் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்று வாக்களித்தனர். மாநகராட்சியின் இதர பகுதிகளில் வாக்குகள் இருந்த குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று வாக்களித்தனர்.

    இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் தங்களை கைவிட்டு விட்டதாக குடியிருப்பு வாசிகள் புலம்புகிறார்கள். மேற்கண்ட பகுதியில் குடியிருக்கும் ஒருவர் நம்மிடம் கூறும் போது, நாங்கள் வீடுகளுக்கு வீட்டு வரி செலுத்தி வருகிறோம். அந்த ரசீதில் பழைய 35-வது வார்டு என இடம்பெற்றுள்ளது. தற்போது 47-வது வார்டில் எங்கள் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குடிநீர் இணைப்பு கேட்டால் உங்கள் தெரு 47-வது வார்டில் இணைக்கப்படவில்லை என சொல்கிறார்கள். அதே போன்று பழைய 35-வது வார்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் உதவிகளுக்காக பிங்க் நம்பர் வழங்கப்படுகிறது. ஆனால் மொராய்ஸ் கார்டன் ரன்வே நகரில் உள்ள கர்ப்பிணி பெண்கள் சென்றால் ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    அங்கு சென்றால் அவர்களும் நம்பர் வழங்காமல் வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறார்கள். எங்கள் தெருவில் பக்கத்து தெரு வரை பாதாள சாக்கடை திட்ட பணிகள் வந்துவிட்டது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளது. எங்களுக்கு மட்டும் இதுவரை அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகிறது.

    தற்போது நாங்கள் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்கின்றோம். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு தெரு விளக்கு, சாலை, பாதாள சாக்கடை குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ரன்வே நகர் மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    உள்ளாட்சி தேர்தலின் போது குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத காரணத்தினால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×