search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வாலிபர்கள்
    X

    போலீசிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வாலிபர்கள்

    • கல்லணையில் போலீசிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது
    • தண்ணீரில் தத்தளித்தவர்களை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் தோகூர் போலீசார் கல்லணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை சாலையோரம் போட்டுவிட்டு தப்பி ஓடினர்.போலீசார் அவர்களை விடாமல் துரத்திச் சென்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அந்த வாலிபர்கள் கொள்ளிடம் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து தப்பினர். இதையடுத்து போலீசார் அவர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.பின்னர் இரவு 10 மணிக்கு மேல் அந்த 2 வாலிபர்களும் நைசாக காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றனர்.அப்போதும் போலீசார் அவர்களை விரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீஸிடம் இருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடினர். பின்னர் மீண்டும் கல்லணை கரிகால் சோழன் யானை சிலை அருகே உள்ள காவேரி ஆற்றில் குதித்தனர்.இரவில் விரட்டிச் சென்ற போலீசார் இருவரையும் காணாததால் ஏமாற்றத்துடன் காவல் நிலையம் திரும்பினர். இதற்கிடையே ஆற்றில் குதித்த இரண்டு வாலிபர்களும் சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் நீச்சல் அடித்தனர்.ஒரு கட்டத்தில் சோர்ந்து போன அவர்களால் நீச்சல் அடிக்க இயலவில்லை. இதனால் தங்களை காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் சத்தம் கேட்பதை பார்த்து லைட் அடித்து பார்த்தனர்.அப்போது 2 வாலிபர்கள் நீச்சல் அடிக்க இயலாமல் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு தண்ணீரில் குதித்து அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.இது பற்றி தகவல் அறிந்த தோப்பூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து தங்களுக்கு போக்கு காட்டிய அந்த 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (வயது 20).திருச்சி காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த முகமது செல்லார்ஷா (19) என்பது தெரியவந்தது. இவர்களில் செல்வகுமார் ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.அதை தொடர்ந்து தோ கூர் இருவரையும் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் உத்தமர் சீலி மேல வெட்டி பகுதியில் மணல் குவாரி கேசியர் மணிகண்டன், அரவிந்த் ஆகியோரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ. 8 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரித்தனர்.ஆனால் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது. நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் கூறும்போது,போலீசை கண்டதும் ஆற்றில் குதித்த இரண்டு வாலிபர்களுக்கும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மது அருந்தி வந்தபோது போலீசுக்கு பயந்து ஆற்றில் குதித்ததாக தெரிவித்தனர்.

    Next Story
    ×