

திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் இந்த விமானத்தில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வெளிநாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையிலும், கொரோனா அறிகுறிகளுடன் வரும் பயணிகளை கண்காணிக்கவும் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சான்றிதழ்களை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு பயணிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதற்கான சான்றிதழ் இருந்தது. இதனை அறிந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை திருச்சி பொது மருத்துவமனையில் உள்ள வார்டில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்
சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் நேற்று திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரும் தமக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சான்றிதழுடன் வந்தார்.
இதனை அறிந்த மருத்துவ குழுவினர் அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அறிந்த இரண்டு விமானங்களிலும் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.