திருச்சி அருகே செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படும் மலை கிராம மக்கள் - வைபை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி

தற்போது நமது நாட்டில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய ஏல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. டவர் கிடைக்காத காரணத்தினால் அந்த மலை கிராம மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை செல்போனில் பேசுவதற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.
திருச்சி அருகே செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படும் மலை கிராம மக்கள் - வைபை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி
Published on

திருச்சி :

டிஜிட்டல் சேவையில் இந்தியா உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது நமது நாட்டில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய ஏல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒருபுறம் நாடே டிஜிட்டல் மயமாகி கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் எந்தவித தொலைத்தொடர்பும் கிடைக்காத நிலையில் பல ஊர்கள் இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் கண்ணூத்து பஞ்சாயத்து மலை கிராம மக்கள் இன்னமும் செல்போன்களை கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதுவரை எந்த செல்போன் கம்பெனியை சேர்ந்தவர்களும் இங்கு டவர் அமைக்க முன்வரவில்லை. இதனால் செல்போன் இணைப்பில் இருந்து மேற்கண்ட கிராமம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மலை கிராம மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக போராடி வருகின்றனர். டவர் கிடைக்காத காரணத்தினால் அந்த மலை கிராம மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை செல்போனில் பேசுவதற்கு நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. கண்ணுத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வையம்பட்டி கிராமத்துக்கு சென்றால் தான் டவர் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

மலை கிராம பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை கூறும்போது, ஒவ்வொரு நாளும் மாணவர் வருகை மற்றும் இதர பணிகளை கணினியில் ஏற்றுவதற்கு பக்கத்து கிராமத்துக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் இதர பள்ளி பணியாளர்களின் வேலை பாதிக்கிறது எனது வேதனை தெரிவித்தார்.

கண்ணூத்து பகுதியைச் சேர்ந்த காந்தாயி என்ற பெண்மணி கூறும் போது, எங்கள் கிராமத்தை குட்டி கொடைக்கானல் என்று அழைக்கிறார்கள். இது பெருமையாக இருக்கிறது. ஆனால் செல்போன் போன்ற நவீன வசதிகளை பெற முடியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஒரு இளம் பெண்ணுக்கு சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்சுக்கு தகவல் சொல்ல வெகு தூரம் நடக்க வேண்டி வந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டிலேயே பிரசவம் நடந்தது என கூறினார்.

தனியார் செல்போன் கம்பெனி நிர்வாகத்தினர் அந்த மலை கிராமத்தில் குறைந்தபட்சம் 500 பேராவது மேற்கண்ட நிறுவனத்தின் செல்போனை பயன்படுத்தினால் மட்டும்தான் செல்போன் கோபுரம் அமைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வைபை வசதிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com