திருச்சி மாவடி குளத்தில் அமைய இருந்த ஓய்வு நேர படகு சவாரி திட்டம் நிறுத்தம்?

திருச்சி மாவடி குளத்தில் அமைய இருந்த ஓய்வு நேர படகு சவாரி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது ஒருங்கிணைப்புக்குழு இல்லாததால் தடுமாற்றம்
திருச்சி மாவடி குளத்தில் அமைய இருந்த ஓய்வு நேர படகு சவாரி திட்டம் நிறுத்தம்?
Published on

திருச்சி

திருச்சி மாநகரில் புண்ணிய ஸ்தலங்களைத் தவிர வேறு வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. மாநகர் மக்கள் காவிரி பாலத்தில் நின்று தண்ணீர் செல்லும் அழகை வேடிக்கை பார்ப்பதையே முக்கியமாக கருதி வந்தனர். தற்போது காவிரி பாலம் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் அதுவும் தடைபட்டுள்ளது.

இதற்கிடையே திருச்சி பொன்மலைபட்டியில் 142 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் மாவடி குளத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க படகு சவாரி கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை மூலம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகியவை 2021 ஜனவரியில் நிறைவடைந்தன.

பின்னர் கிழக்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அந்தக் குளத்தில் படகு சவாரியை கொண்டு வர ரூ.1.75 லட்சத்தில் இரண்டு துடுப்பு படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது திருச்சி நகரின் மிகப்பெரிய நீர்நிலையான மாவடிக்குளம் குளத்தில் உத்தேசிக்கப்பட்ட ஓய்வுநேர படகு சவாரி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே குளத்தையொட்டி அமைக்கப்பட்ட நடைபாதை இரண்டு ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது. இங்கு சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்ட நடைமேடை, சரியான வாய்க்கால் இல்லாததால், சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்தது. சாலை மற்றும் தெருவிளக்கு உள்கட்டமைப்பும் மோசமாக உள்ளது.

மேலும் தற்போது நடைபெற்று வரும் பாதாள வடிகால் பணியால் சேதமடைந்த பாதசாரிகளுக்கான பாதையை திருச்சி மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை கூறினாலும், உள்ளாட்சி அமைப்பு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. குளத்தை மேம்படுத்த ஏற்கனவே ரூ.1 கோடியே 92 லட்சம் செலவழித்துள்ளோம். இனிமேலும் நாங்கள் செலவழிக்க தயாராக இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி பழுதடைந்த நடை பாதையை சீரமைத்து படகு சவாரியை திட்டமிட்டபடி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com