

திருச்சி:
திருச்சி அருகே உள்ள தாயனூர் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 72). இவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான மகள் சந்திரா, வெள்ளையம்மாளிடம் இரண்டு சென்ட் நிலம் கேட்டுள்ளார்.இதற்கு அவர் ஒப்புக் கொண்டு சந்திரா தயார் செய்த ஆவணங்களில் கையெழுத்துள்ளார்.
அப்போது மூதாட்டிக்கு தெரியாமல் அவரை ஏமாற்றி வீடு மற்றும் மொத்த நிலத்தையும் சந்திரா அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சந்திரா தனது கணவர் சங்கன், மகன்கள் கார்த்திக், பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளையம்மாளை வீட்டிலிருந்து வெளியேறச் சொல்லி வீட்டை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளையம்மாள் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மகள் சந்திரா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.