search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுந்தகவல் லிங்கை திறந்த முன்னாள் வங்கி ஊழியர் கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் அபேஸ் - படித்தவர்களும் ஏமாறுவதால் சைபர் கிரைம் போலீசார் வேதனை
    X

    குறுந்தகவல் லிங்கை திறந்த முன்னாள் வங்கி ஊழியர் கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் அபேஸ் - படித்தவர்களும் ஏமாறுவதால் சைபர் கிரைம் போலீசார் வேதனை

    • கடந்த 2 தினங்களுக்கு முன்பாக இவருக்கு வங்கியில் இருந்து வந்தது போல ஒரு குறுந்தகவல் இவரின் செல்போன் எண்ணுக்கு வந்துள்ளது.
    • சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது

    திருச்சி:

    திருச்சி நம்பர் 1 டோல்கேட் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 33). இவர் எம்.சி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலமாக வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக இவருக்கு வங்கியில் இருந்து வந்தது போல ஒரு குறுந்தகவல் இவரின் செல்போன் எண்ணுக்கு வந்துள்ளது.

    அதற்கு முன்தினம் அவர் செல்போனுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் அக்கவுண்ட் கிரிடிட் கார்டு சரிபார்ப்புக்காக லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்க்கை ஓப்பன் செய்து சரி செய்யவும். இல்லையென்றால் கார்டு பிளாக் செய்யப்படும் என்று தகவல் வந்தது. இதையடுத்து அவர் லிங்க்கை ஓபன் செய்து பெயர் மற்றும் கார்டு நம்பர், பின் நம்பர் சரிபார்த்தார். பின்னர் ஓடிபி வந்தது. அதனையும் சதீஷ் செலுத்தினார்.

    சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதற்கிடையே அவர் கிரெடிட் கார்டு இருக்கும் வங்கியில் இருந்து தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்த சதீஷ் வங்கிக்கு பேசியுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் ஏன் நீங்கள் தற்போது ரூ.1.15 லட்சம் உடனடியாக செலவு செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஸ் நான் செலவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் இது குறித்து அவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சதீஷ் ஏற்கனவே தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோல வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று குறுந்தகவல்கள் அல்லது தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தால் பொதுமக்கள் சற்று கவனமாக கையாள வேண்டும் என்றும், செல்போன் எண்ணுக்கு வரும் இதுபோன்ற லிங்க்கை திறக்க வேண்டாம் என்றும் போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் படித்தவர்களும் ஏமாறுவதை கண்டு போலீசார் வேதனை அடைகின்றனர் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×