முசிறி,
முசிறி அடுத்த மணலி ஐத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அன்னலட்சுமி(வயது 42). இவர் வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனை அறிந்த அன்னலட்சுமி, கூச்சலிட்டு உள்ளார். இதனால் அந்த நபர் தப்பி ஓடி உள்ளார். அப்போது அன்னலட்சுமியின் மகன் அந்த நபரை துரத்தி சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி குடியிருப்புவாசி அழகேசன் கட்டிலை குறுக்கே போட்டு திருடனை தடுத்து நிறுத்த முயற்சித்து உள்ளார். ஆனால் இதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த திருடன், தனது டூவிலரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றுள்ளார். அவ்வாறு தப்பி பைக்கில் வேகமாக சென்றபோது அருகில் உள்ள சாலை வளைவில் நிலை தடுமாறி திருடன் கீழே விழுந்துள்ளான். பின்னால் ஆட்கள் துரத்தி வருவதால், பைக்கை அதே இடத்தில் போட்டுவிட்டு திருடன் தப்பி சென்றுள்ளான். பைக்கை கைப்பற்றிய அப்பகுதி அது யாருடையது என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த பைக் பெரிய கொடுத்துறை சேர்ந்த தியாகராஜன் மகன் முத்து செல்வம் என்கிற செல்வம் (வயது 52) என்பவருடையது என்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அன்னலட்சுமி புகார் அளித்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர கோகிலா வழக்கு பதிந்து முத்து செல்வத்தை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.