search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு
    X

    10 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு

    • திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருச்சி :

    கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு ஆர்ப்பரித்து வந்ததையடுத்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது.

    இதனால் காவிரியில் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டது. இடையில் பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணை வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை லட்சம் கனஅடி நீர் வரை வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கரையோரம் வசித்த மக்கள் மேடான பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். லால்குடி, உத்தமர் சீலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழைப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. உத்தமர்சீலி பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால் மூன்று நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

    இதற்கிடையே நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. கடந்த 16-ந்தேதி முக்கொம்பு அணைக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் 18-ந்தேதி மேலும் சரிந்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அன்று காலை முதல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் கர்நாடகாவில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் தண்ணீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே முழுவதுமாக திறக்கப்படுகிறது.

    எனவே மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு காவிரி ஆற்றில் தற்போது மீண்டும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதையடுத்து கொள்ளிடத்தில் 40 ஆயிரம் கனஅடி நீரும், காவிரியில் 21 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×