இருதரப்பினரிடையே மோதல்- இளைஞர்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மறியல் போராட்டத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருதரப்பினரிடையே மோதல்- இளைஞர்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாள் திருவிழாவின் போது சங்கொலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக கடலூர் முதுநகர் போலீசார், இன்று காலை சங்கொலிக்குப்பம் கிராமத்திற்கு சென்றனர். தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதி இளைஞர்களை கைது செய்யக்கூடாது என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊருக்குள் செல்ல முடியாமல் போலீசாரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சங்கொலிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இதற்கு முன்பு நாங்கள் அளித்த பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தற்போது எங்கள் பகுதி இளைஞர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினர்.

அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதனையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com