search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாபயணிகள்
    X

    கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாபயணிகள்

    • இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.
    • அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்

    கோபி, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    பகலில் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது. ஆனாலும் பகல் நேரத்தில் வழக்கம் போல் அனல் காற்று வீசி வருகிறது.

    இதனால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. அத்தியா வசிய தேவை–களுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து செல்கிறார்கள்.

    அதுவும் குடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, இளநீர், நுங்கு, மற்றும் வெள்ளரி பிஞ்சுகள், பழச்சாறு, கரும்புசாறு குடித்து வருகிறார்கள்.

    கோடை காலம்தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி வெயில் பதிவானது. இனி வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.

    அனல் காற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கொடிவேரி பகுதி முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    Next Story
    ×