search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மண்டபம் அருகே கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி
    X

    மண்டபம் அருகே கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி

    • மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மண்டபம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

    மண்டபத்தை சேர்ந்த சுதர்சன் என்பவரது படகில் பாம்பனை சேர்ந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம், பிரசாத், மண்டபம் முகமது அனீபா ஆகிய 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மண்டபத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றால் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விசைப்படகு கட்டுப்பாடின்றி தள்ளாடியது.

    தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக விசைப்படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தண்ணீரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து கடல் தண்ணீர் உள்புகுந்ததால் படகு மூழ்க தொடங்கியது.

    செய்வதறியாது தவித்த மீனவர்கள் கடலில் குதித்தனர். இதில் பிரசாத், முகமது அனீபா ஆகியோர் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர்தப்பினர். ஆனால் மற்ற மீனவர்களான பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம் ஆகியோர் கடல் சீற்றத்தால் மாயமானார்கள். அவர்களை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கரைக்கு அவசரமாக திரும்பிய மீனவர்கள் படகு மூழ்கி மீனவர்கள் மாயமானது தொடர்பாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் படகு மூழ்கிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 2 மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. உறவினர்கள் வரவழைக்கப்பட்டு உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தடை காலம் முடிந்து முதல் நாளிலேயே விசைப் படகு மூழ்கி 2 மீனவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

    Next Story
    ×