search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசி ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    வந்தவாசி ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நடந்தது
    • போலீசார் சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருந்த ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அந்த அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ.83.76 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் நேற்று மாலை வரை வழங்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் இன்று மாலை வரை பெற்றுக் கொள்ளப்படும் என்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய நிர்வாகம் அலுவலகத்தில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியது.

    இதனால் ஆத்திரமடைந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆர்.விஜயன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் 5 பெண் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

    அதிகாரிகள் அைலகழிப்பு

    இந்த ஒப்பந்தப்புள்ளி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்களை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்தனர். இப்போதோ மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். ஒப்பந்தப்புள்ளி தள்ளி வைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே அதிகாரிகள் இதுபோன்று முறையற்று செயல்படுகின்றனர். எனவே ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    Next Story
    ×