search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுடுகாட்டுப் பாதை பிரச்சினையால் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியல் செய்த பொதுமக்கள்.

    சுடுகாட்டுப் பாதை பிரச்சினையால் பொதுமக்கள் சாலை மறியல்

    • போலீசாரிடம் வாக்குவாதம்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே சுடுகாட்டுப் பாதை பிரச்சனையை தீர்க்கக் கோரியும், இது தொடர்பான பிரச்சனையில் முதியவரை கத்தியால் வெட்டியவர்களை கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கடந்த பல ஆண்டுகளாக தனியார் விவசாய நிலம் வழியாக பிணங்களை அந்த கிராம பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த நிலத்தை வாங்கிய மற்றொரு நபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிணங்களை எடுத்துச் செல்லும் பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் தோண்டினாராம். இதனால் அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்களுக்கும் கிராம பொதுமக்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பான பிரச்சினையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(65) என்பவரை அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் வெட்டினராம்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சுடுகாட்டுப் பாதை பிரச்சினையை தீர்க்கக் கோரியும், சீனிவாசனை கத்தியால் வெட்டிய நபர்களை கைது செய்யக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீசார் பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, ஏற்கனவே புகார் கொடுத்த போதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சீனிவாசனை வெட்டும் அளவுக்கு பிரச்சினை வளர்ந்திருக்காது என்று கோபமாக தெரிவித்த பொதுமக்கள் சிலர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை போலீசார் தடுக்கவே அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி கார்த்திக் பொதுமக்களை சமரசப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×