search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

    • தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.

    முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2019 முதல் 31-7-2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2017 முதல் 31-7-2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படம், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, வருமான சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை ஏதேனும் இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெற்றால் குலுக்கல் முறையில் வருகிற மே மாதம் 23-ந் தேதி அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்ற எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தகுதியான விண்ணப்பங்கள் முதலில் சேர்க்கை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×