search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்பு படம்.

    சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது
    • சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை.

    அவிநாசி:

    சேவூர் சுற்றுவட்டார பகுதி மழை மறைவு பிரதேசம். இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் முதன்மையான இடம்பிடித்திருப்பது நிலக்கடலை. சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது. பனை மரம் போல் வறட்சியை தாங்கி வளரும் ஒரு உன்னத பயிராக விவசாயிகள் இன்றும் இதனை கருதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடுகோரி இப்பகுதி விவசாயிகள் கடந்த வாரம் அவினாசி வந்த மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

    இது குறித்து சேவூர் பகுதி நிலக்கடலை விவசாயிகள் கூறியதாவது:-

    சேவூர், குட்டகம், தண்ணீர்பந்தல்பாளையம், போத்தம்பாளையம், தாமரைக்குளம், பாப்பான்குளம், முறியாண்டாம்பாளையம், கானூர், நடுவச்சேரி, வடுகபாளையம், மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம் என 30 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை விவசாயம் நடந்து வருகிறது. வறட்சியை தாங்கி வளர்வதால் இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இந்த நிலக்கடலை சாகுபடி உள்ளது. மழை பெய்யும் போது கிடைக்கும் நிலத்தடி நீர் மற்றும் நீராதாரத்தை கொண்டு விளையும் மானாவாரி பயிர் என்பதால், பலரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை. குறிப்பாக செம்மண் கலந்த சரளை மண் என்பதால், மண்ணில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது. அதேபோல் விளையும் கடலைச்செடியிலும் பருப்புகள் மிகவும் உருப்படியாகவும், தரமாகவும் மற்றும் சத்து நிறைந்து ஆரோக்கியமாக இருப்பதால், இங்கு உற்பத்தி செய்யும் கடலைக்கு ஏக மவுசு. அதேபோல் கடலை பருப்பி, கடலை எண்ணெய் மற்றும் வறுகடலைக்கு இந்த கடலைகள் நன்கு சுவையாகவும், இயற்கையாகவும் விளையும் தன்மை கொண்டதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. அதேபோல் சுவையுடன், சத்தும் சேர்ந்திருப்பதால் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    அதேபோல் கடலை எண்ணெய்யை பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணை நிறுவனம் மூலம் மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, விவசாயிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். மானாவாரி விவசாயம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறையும், கிணற்று பாசனம் என்றால் ஆண்டுக்கு இருமுறையும் விளைவிப்போம். 100 நாட்கள் தான் இதன் அறுவடை காலம். எங்கள் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்பில் விளையும் சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேவூர் நிலக்கடலை இந்த பகுதியில் 4600 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ மூட்டை 60 கிலோ ஆகும். நல்ல தரமான, சுவையான, சத்தான பருப்பாக இங்கு விளையும் கடலை இருப்பதால் பொதுமக்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல்களின் படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை நடைபெறுகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

    சேவூர் கடலை மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் வெகு பிரசித்தம். இதனை நாடும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். புவிசார் குறியீடு கோரி விவசாயிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இதனை அரசு தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×