search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லாற்றில் சாயக்கழிவு கலப்பது தடுக்கப்படுமா - விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்

    நல்லாற்றில் சாயக்கழிவு கலப்பது தடுக்கப்படுமா - விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • நிறுவனங்களிலிருந்து சேகரமாகும் ரசாயனம், சாய வகைகள் உள்ளிட்டவை பேக்கிங் செய்து வரும் பாலிதீன் பைகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் நிலை உள்ளது.
    • நஞ்சராயன் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி ரூ.4 கோடி மதிப்பீட்டில், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல்வேறு விதமான கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. மறு சுழற்சியில் பயன்படுத்தும் கழிவுகள், ரசாயன கழிவுகள் என அவை உள்ளன.

    அவ்வகையில் சாய மற்றும் சலவை ஆலைகளில் பல்வேறு விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்களிலிருந்து சேகரமாகும் ரசாயனம், சாய வகைகள் உள்ளிட்டவை பேக்கிங் செய்து வரும் பாலிதீன் பைகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் நிலை உள்ளது.

    இவ்வாறான பாலிதீன் கவர்களை நிறுவனங்களிலிருந்து பெற்று வரும் நபர்கள் அவற்றை சுத்தம் செய்து கடைகள் மற்றும் மூலப் பொருள் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் பாலிதீன் கவர்களை ஜம்மனை ஓடையின் கரையில் வைத்து சுத்தம் செய்து அங்கேயே உலர வைத்து கடைகளுக்கு மீண்டும் பயன்படுத்த விற்பனை செய்யப்படுகிறது.

    நீர் மற்றும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும் ரசாயனங்கள் இதில் இருக்க வாய்ப்புள்ளது. ஜம்மனை ஓடையின் கரையில் இது போல் ரசாயன பேக்கிங் பாலிதீன் கவர்கள் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுவது குறித்து உரிய துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் நஞ்சராயன் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி ரூ.4 கோடி மதிப்பீட்டில், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது. அப்போது நல்லாற்றில் வரும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலக்காமல் சுத்திகரித்து தேக்கி வைக்க கட்டமைப்பு நிறுவப்பட்டது.

    குளத்தின் மேற்கு எல்லையில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது; இருப்பினும் ஒருநாள் கூட செயல்படாமல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இந்நிலையில் குளத்தில் ஆய்வு செய்ய வந்திருந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம், கூலிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் இதுகுறித்து முறையிட்டனர்.

    நல்லாற்றில் வரும் கழிவுநீரில் சாயக்கழிவு கலந்துவிடுகிறது. எனவே சுத்திகரிப்பு செய்த பிறகே குளத்தில் தண்ணீர் தேக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். விவசாய நிலத்தையும், கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டுமென முறையிட்டனர்.

    சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி அளித்த மனுவில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நஞ்சராயன் குளத்தின் முன்பகுதியில் உள்ள 8.90 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டதில் ரூ.75 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்து 8.90 ஏக்கரை மீட்டு குளத்துடன் சேர்க்க வேண்டும் என்று முறையிட்டார்.

    தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், குளத்தையொட்டியுள்ள நிலத்தை, தனியாருக்கு விற்பனை செய்துள்ளதை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். எனவே தனியாருக்கு வழங்கிய நிலத்தை மீட்டு பறவைகள் சரணாலயத்துடன் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. அவை செயல்பாட்டுக்கு வரும் போது குளத்துக்கு சுத்திகரித்த கழிவுநீர் மட்டும் வரும். சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். குளம் முழுமையாக சர்வே செய்து 310 ஏக்கர் நிலமும் மீட்கப்படும். அரசு நிலம் தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிலத்தை மீட்க ஆவணம் செய்யப்படும் என்றார்.

    Next Story
    ×