உடுமலை அமராவதி பகுதியில் கனிம வள கொள்ளை தடுக்கப்படுமா?

நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இயற்கையால் படைக்கப்பட்ட அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன.
மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம். 
மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம். 
Published on

உடுமலை :

உடுமலையை அடுத்த அமராவதி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் தம்புரான் கோவில் அருகே அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவமும் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ், சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்து கடத்திச்சென்ற வண்ணம் உள்ளனர். அதே போன்று நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் முறைகேடான வழியில் நடைபெற்று வரும் தொடர் கனிமவள கொள்ளையால் தட்பவெப்ப நிலை மாற்றமும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

இது சம்பந்தமாக புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக புகார் அளிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் ஆய்வு செய்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com