

பல்லடம் :
பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் சான்று கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.அவரிடம் அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள், ஜாதி சான்று இல்லாததால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் வசிக்கும் அறிவொளி நகரில் சிறப்பு முகாம் நடத்தி நரிக்குறவர் இன மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினார். சப் -கலெக்டர் அறிவுரையின்படி நேற்று ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தேவராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் வகுப்பு சான்று-9,வருமானச்சான்று- 1,குடும்ப அட்டை பெயர் சேர்ப்பு-2, வாக்காளர் அடையாள அட்டை படிவம் - 6 உள்ளிட்ட 79 மனுக்கள் பெறப்பட்டது.இந்த மனுக்கள் மீது ஆய்வு செய்து உரிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சின்னப்பன்,ஊராட்சி வார்டு மெம்பர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.