search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணியால் திருமூர்த்தி அணைக்கு  நீர்வரத்து நிறுத்தம்
    X

    உடுமலை திருமூர்த்தி அணை.

    உடுமலை காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணியால் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து நிறுத்தம்

    • அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் பரம்பிக்குளம் சோலையார் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர்வரத்து இல்லை.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் கடைசி அணையாக இது உள்ளது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஏராளமான கூட்டுக் குடிநீர் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து பொள்ளாச்சி சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இது தவிர பாலாறு மூலமும் தண்ணீர் வருகிறது. ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை தான் பி.ஏ.பி., அணைகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்குரிய தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை. அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் பரம்பிக்குளம் சோலையார் உள்ளிட்ட அணைகளுக்குபோதுமான நீர்வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் மெதுவாக தான் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் அணையின் நீர்மட்டம் 28.67 அடியாக குறைந்துள்ளது. பாலாறு மூலம் வெறும் 8 கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. குடிநீர் மற்றும் பிற தேவைக்காக 27 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திருமூர்த்தி அணையில் 41.85 அடி நீர்மட்டம் இருந்தது. தற்போது கால்வாய் பராமரிப்பு பணி முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×