search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூர்– காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.62.29 கோடி மதிப்பில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி அமைச்சர்கள் தொடங்கி  வைத்தனர்.
    X

    முத்தூர்– காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டதை தொடக்கி வைத்த காட்சி.

    முத்தூர்– காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.62.29 கோடி மதிப்பில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

    • புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
    • பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில் நகராட்சியில் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் முத்தூர்– காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய மின் மோட்டார் அமைத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணியினை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்த தாவது:-

    வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீமுருகன் திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முத்தூர் –காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

    முத்தூர் காங்கேயம் கூட்டுக்குடிநீர் திட்டமானது திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 1790 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 86 கிராம ஊராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டமாகும். 1998-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் உள்ள கான்கிரீட் குழாய்கள் 25 வருடங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வடிவமைக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலவில்லை. அதன் பொருட்டு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்குதல் துறையின் மூலமாக ரூ. 62.29 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணியானது 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முத்தூர் – காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இத்திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் தலைமைப்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) செல்லமுத்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் கண்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×