முட்டைகோஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்

ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.
முட்டைகோஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை  விவசாயிகள்
Published on

உடுமலை :

உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய உடுமலை பகுதி கிராமங்களில் உள்ள குளிர்ந்த வானிலை முட்டைகோஸ் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.அதனடிப்படையில் தற்போது முட்டைகோஸ் சாகுபடியில்ஈடுபட்டுள்ளோம்.

ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 250 கிராம் விதைகள் போதுமானது.நாற்றங்கால் அமைத்து தொழு உரம்,மண் புழு உரம் போன்றவற்றைப் போட்டு விதைப்படுக்கை அமைக்கிறோம்.அதில் 10 செமீ இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும்.

பின்னர் நாற்றுக்களைப் பிடுங்கி தயார்படுத்தப்பட்ட நிலத்தில் 40 செமீ இடைவெளியில் நடவு செய்கிறோம்.முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.

பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப் புழுக்கள்,அஸ்வினிகள் தாக்குதல் இருக்கும்.இதுதவிர இலைப் புள்ளி நோய்,இலைக் கருகல் நோய்,கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.எனவே அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத்துறையினரின் பரிந்துரை பெற்று தெளிப்பது சிறந்தது.

முட்டைகோசை நடவு செய்த 75 நாளில் அறுவடை செய்யத்தொடங்கலாம்.சுமார் 120 நாட்கள் வரை 8 முறை அறுவடை செய்யலாம்.இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.

மலைப்பகுதிகளில் இதை விட 3 மடங்கு மகசூல் கிடைக்கும் என்றாலும் சமவெளியிலும் முட்டைகோஸ் சாகுபடி லாபகரமானதாகவே உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com