வரி உயர்வை குறைக்க வேண்டும் - வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தல்

25 ஆண்டுகளில் வாகனங்களின் மீது இதுபோன்ற ஒரு வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது இல்லை.இந்த வரி உயர்வால், மறைமுகமாக அனைத்தின் விலையும் உயர்ந்து பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

சட்டசபையில் அனைத்து விதமான வாகனங்களுக்கும் வாகன வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வரி உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட பொக்லைன் எந்திர உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜே.சி.பி., எந்திரங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் வாகனங்களின் மீது இதுபோன்ற ஒரு வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது இல்லை.

உதாரணத்துக்கு தற்போதைய சூழலில் 10 லட்சம் ரூபாய்க்கு புதிய வாகனம் வாங்கினால், வரியுடன் சேர்த்து, 12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இதனால், புதிதாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். புதிய பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விலையும் உயரும். இதன் அடிப்படையில் வண்டி வாடகை, ஆள் கூலி, இதர பொருட்களின் விலை உள்ளிட்டவையும் உயரும்.

ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, ஜே.சி.பி., வாடகை கடந்த ஓராண்டுக்கு முன் உயர்த்தப்பட்டது. உயர்த்திய வாடகையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரி உயர்வால் புதிதாக வண்டி வாங்கி வாடகைக்கு தொழில் செய்ய நினைப்பவர்கள் யோசித்துப்பாருங்கள். இதனால் பழைய வாகனங்களை விற்பனை செய்பவர்கள் மட்டும் பயன்பெறுவார்கள்.

மற்றபடி வாகன தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வரி உயர்வால், மறைமுகமாக அனைத்தின் விலையும் உயர்ந்து பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

எனவே வரி உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலித்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com