அரசு கல்லூரிகளில் தமிழ் மன்றம் தொடக்கம்

மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தாராபுரம்:

கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 2022-23 தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கையின் படி அரசு கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றம் துவக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கல்லூரிகளுக்கு 5 லட்சம் வீதம் வைப்பு நிதியாக வழங்க 5 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிதியின் வாயிலாக கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் ஆண்டுதோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் வைப்பு நிதியில் வட்டி கிடைக்காது என்பதால் போட்டிகள் நடத்த 36 லட்சம் ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் தமிழ் மன்றம் செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்த கூடாது.

மாணவர் மன்ற போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை நடத்தும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில்,அரசு கல்லூரிகளில் தமிழ்த்துறை மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்த மன்றங்கள் உள்ளன. புதிதாக தமிழ் மன்றம் துவக்குவதால் மாற்றங்கள் ஏதும் அதில் இருக்க போவதில்லை. மாணவர்கள் சிலர் கட்சி சார்ந்த சாராத அமைப்புகளில் இருக்கின்றனர். இவர்கள் மன்ற செயல்பாடுகளை திசை திருப்ப வாய்ப்புள்ளது. மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.

மன்ற செயல்பாடுகளுக்கு தெளிவான விதிமுறைகளையும் வகுக்க வேண்டியது அவசியம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com